வருவான் 28
வேலு, பூவினா, கிரேசா, ஜெயராம், செந்தில் அனைவரும் கார்பரேஷன் ஆபீஸ்சில் கொடுத்த முதல் முகவரிக்குச் சென்றனர். அங்கே இருந்த வாலிபனிடம்,
"வைதேகி இருக்காங்களா? அவங்க என் அம்மாவோட சின்னவயது தோழி. நாங்க புதுசா வீடு கட்டியிருங்கோம். கிரஹபிரவேசத்துக்கு அம்மா அவங்க தோழிகளுக்கு அழைப்பு வைக்கிறாங்க... நாங்க அவங்களைப் பார்க்கலாமா? " நீண்ட கதை சொல்லி முடித்தான் வேலு.
"இதோ வரச் சொல்றேன்" என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றவனுடன் வைதேகி வந்தார். அவரிடமும் அதே கதையை வேலு சொல்ல,
"உங்கம்மா பேர் என்னப்பா?" என்று ஆர்வமாகக் கேட்டார் வைதேகி.
'அடடா பேர் என்ன சொல்றது?' என்று யோசித்தவனுக்கு அவன் அம்மா சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. யாரோ ஒரு பெண், மார்க்கெட்டில் வேலுவை பார்த்தவர்கள்,
"நீ ஷோபியாவோட பையனா? என்று ஆரம்பித்து, அரைமணிநேரம் பேசிவிட்டு, "என் பேரு சாந்தி! நான் விசாரிச்சேன்னு ஷோபியா கிட்ட சொல்லு." என்று கூற,
'இதுக்குப் பேருதான் விசாரிக்கிறதா? அவங்க வீட்டு, ஒட்டு மொத்த குடும்ப விஷயங்களையும் ஒப்பிச்சுட்டு போறாங்க?!!' என்று சிரித்தபடி வந்து தான் தாயிடம் கூறினான். ஷோபியா கேட்டாரே ஒரு கேள்வி!!!
"எந்த சாந்தி டா?"
"உங்க தோழின்னு சொன்னாங்க ம்மா. "
"சாந்திங்கிற பேர்ல வகுப்புக்கு ரெண்டு பேர் இருப்பாங்க... தெருவுல நாலுபேருக்கு சாந்திங்கிற பேர்தான் இருக்கும்... இதில் எந்த சாந்தினு நான் கண்டேன்." என்று அம்மா குழம்பியது ஞாபகத்துக்கு வந்தவுடனே,
"எங்கம்மா பேரு சாந்தி!" என்றதுதான் தாமதம் வேலுவே எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்தது.
"சாந்தியோட மகனா நீ? வாப்பா! அம்மா எப்படி இருக்கா?" என்று ஒரே பரபரப்பு.
இதெல்லாம் அடங்கியபிறகு,
'இந்த வைதேகிதான் ரகுவோட காதலின்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?' என்று நேரடியாகவும் கேட்க முடியாமல் வேலு திணற,
பூவினா வேலுவின் விரலில் இருந்த மோதிரத்தை வைதேகியிடம் காட்டி,
"இதே மாதிரி மோதிரம் உங்க கிட்டயும் இருக்கா?" என்று கேட்டு விட்டாள்.
அந்த மோதிரத்தை உற்று பார்த்தவர் முகத்தில் மற்றவர்கள் எதிர்பார்த்த எந்த பாவமும் இல்லை!!
"இல்லையே! ஏம்மா கேட்கிற? நல்லா அழகான டிசைன் இருக்கே?" என்று கேட்க,
"யாரோ ஒரு தோழியும் எங்க அத்தையும் சேர்ந்து ஒரே மாதிரி மோதிரம் வாங்கியதாகச் சொன்னாங்க... அதான் கேட்டேன்." என்றாள் இயல்பாக.
"வேற யாரையாவது சொல்லியிருப்பா... " என்று வெள்ளந்தியாகச் சிரித்தார் வைதேகி.
'அடுத்து என்ன கேட்பது?' என்று அனைவரும் யோசிக்கும்போது,
"நீ யாரும்மா?" என்று பூவினாவிடம் வைதேகி கேட்க,
"டாக்டர் செந்தில் சாரோட தம்பி பொண்ணு, கிரஹபிரவேசத்துக்குப் பிறகு நானும் வேலுவும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்." என்று கூறி செந்திலை குறிப்பிட்டு கூறியதும், வைதேகி டாக்டர் செந்திலைப் பார்த்து,
"நீங்க டாக்டரா? எங்க இருக்கு உங்க ஆஸ்பத்திரி? என்று கேட்டார்.
'அடடா இவரையும் தெரியல!!!' என்றது நம்ம பிள்ளைகளின் மைண்ட் வாய்ஸ்...
"நானும் ரகுநந்தனும் அரசு மருத்துவமனையில் வேலை செய்றோம்மா." என்று செந்தில் கூறவும்,
அனைவரும் வைதேகியின் முகமாற்றத்திற்காகக் காத்திருக்க, ஆனால் வைதேகியின் முகத்தில் சின்னமாறுதல் கூட இல்லை. இறுதியாக வேலு,
"நீங்க படிச்சுட்டு வேலைக்குப் போறீங்களாம்மா? " என்று கேட்டான்.
"இல்லைப்பா... பன்னிரண்டாவது படிக்கும்போதே கட்டிக்குடுத்துட்டாங்க... உன் அம்மாகூட என் கல்யாணத்துக்கு வந்தா. ம்ஹும்! ! என்னால்தான் உங்கம்மா கல்யாணத்துக்கு வர முடியல..." என்று ஏதேதோ பேசியவர்கள் விடைபெற்று வெளியே வந்தனர். அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,
"இவங்க நாம தேடிவந்த வைதேகி இல்ல!" என்று ஒரே குரலில் கூறினர்.
அடுத்த வைதேகியிடமும் இதே பாணியில் விசாரிக்க,
அவர் ஆசிரியர் வேலைக்குப் படித்து ஆசிரியராக வேலைசெய்கிறார். ரகுநந்தனையும் தெரியவில்லை.
மூன்றாம் வைதேகி பயங்கர எலுமிச்சை நிறத்தில் இருக்கவே, நம்ம வைதேகி மாநிறம்னு ஜெய் சொல்லி இருந்ததால், இவரும் தேடிவந்த வைதேகியாக இருக்க முடியாது என்று முடிவுக்கு வந்து, பட்டும் படாமலும் பேசிவிட்டு வெளியே வந்தனர்.
அனைவருக்குமே மிகவும் சோர்வாக இருந்தது. "அடுத்து?" என்ற கேள்வி பூதாகரமாக மிரட்டியது.
"ஒருவேளை வைதேகியை வெளியூரில் கல்யாணம் பண்ணிக் குடுத்திருப்பாங்களோ?" என்று சந்தேகப்பட்டான் ஜெயராம்.
அதற்கும் சாத்தியமிருந்ததால் அனைவருமே ஒரே குரலில்,
"எப்படி வேலு கண்டுபிடிக்கிறது?" என்று வேலுவிடம் கேட்டனர்.
வண்டியை மிகவும் மெதுவாக ஓட்டியபடி வேலுவும் மற்றவர்களும், மறுபடியும் அன்று நடந்தவைகளை ஞாபகப்படுத்திப் பார்த்தனர்.
வேலுவிற்கு சட்டென்று ஒரு பொறி தட்ட, செந்திலிடம், "வைதேகி எந்தப் பத்திரிகையில் வேலை பார்த்தாங்கன்னு தெரியுமா?" என்று கேட்டான்.
"நல்லாத் தெரியுமே எங்க மருத்துவமனை டாக்டரைப் பேட்டி எடுக்க வந்த ஒரே பத்திரிகையாச்சே? "சர்க்கார்" பத்திரிகை." என்று கூறியதும் அனைவருக்குமே மீண்டும் நம்பிக்கை வந்தது.
அனைவரும் மதிய உணவு முடித்து சர்க்கார் பத்திரிகை அலுவலகத்தில், கேமரா ரமேஷ்சைப் பார்க்க வந்ததாகக் கூறி, வரவேற்பு அறையில் காத்திருந்தனர்.
"இன்னுமா கேமரா ரமேஷாக இருப்பார்?" என்று கேட்டாள் பூவினா.
"என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்." என்று வேலு கூற,
ஜெயராம் மெல்ல நடந்து சென்று டெலிஃபோன் ஆப்பரேட்டர் அறையை நெருங்கி, அங்கே இருந்தவனைப் பார்த்து, 'ஒருவேளை இவன் அதே பேதி பிரசாத்தாக இருந்தால்?!!' என்று தோன்ற,
"பிரசாத்!"என்று அழைத்தான்,
நிமிர்ந்து பார்த்த பிரசாத்திற்கு வயிறு தானாகக் கலங்க, 'இவரை எங்கேயோ…' என்று யோசிக்கும்போதே அவனுடைய வயிற்றிலிருந்து வந்த சப்தம், ஜேய்சஞ்சீவ்வை அடையாளம் காட்ட, பதறி எழுந்து ஜெயராம் அருகில் வந்தவன்,
"என்ன டாக்டர்? இங்கே வந்திருக்கீங்க? அன்னைக்குப் பார்த்த மாதிரி அப்படியே இருக்கீங்களே?" என்று ஆச்சர்யபட்டுக் கேட்டான்.
"எனக்கு ஒரு உதவி வேணும்... கொஞ்சம் வெளியே போய்ப் பேசுவோமா?" என்று ஜெயராம் அழைத்ததும்,
"உங்களுக்கு என்ன உதவின்னாலும் பண்ணித்தாரேன்... ஆனா உங்க கூட வெளியே வரமாட்டேன்." என்றான் உறுதியாக,
'இவனும் பேதி மாத்திரையை மறக்கல போலயே?!!' என்று நினைத்த ஜெயராம்,
"நான் பழய மாதிரி இல்லை... நீங்க எதுவுமே சாப்பிட வேண்டாம். சில விபரங்கள் வேண்டும். இங்கே வச்சு பேச முடியாது. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க" என்று ஜெயராம் கூறியவிதத்தில் அவனுடன் வெளியே வந்தான் பிரசாத்.
அதற்குள் "காமரா ரமேஷ்னு யாரும் இல்லை." என்ற விபரம் கிடைத்தவர்கள்,
வைதேகி பற்றிக் கேட்க, அவளையும் தெரியவில்லை...
வேலு, வைதேகி வேலை செய்த வருடத்தைக் கூற,
"இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்தவங்களையா தேடிவந்திருக்கீங்க" என்று கூறிவிட்டு ஒரு டைப்பாகப் பார்த்தான் ஆபீஸ் பாய்.
"அந்த வருஷத்தில் வேலை பார்த்தவங்க ஒருத்தர்கூடவா இப்போது இல்லை?" என்று வேலு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, ஜெயராம் பிரசாத்துடன் வருவதைப் பார்த்த வேலு,
"நீ எங்கே போன?" என்று கேட்க,
"இவர்தான் பிரசாத் நம்ம வைதேகியோட வேலை பார்த்த டெலிஃபோன் ஆப்பரேட்டர்." என்று அறிமுகம் செய்து வைத்தான்.
ஹோட்டலுக்கு வர பிரசாத் மறுக்கவே, அனைவரும் அருகில் இருந்த கோயிலுக்குச் சென்றனர். அதிக ஜனநடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்ததுமே பூவினா,
"வைதேகியை நாங்க பார்க்க முடியுமா?" என்று கேட்டாள்.
"வைதேகியா? என்ன? இத்தனைவருஷம் கழிச்சு வந்திருக்கீங்க? யார் டாக்டர் இவங்க எல்லாம்?" என்று ஜெயராமிடம் கேட்டான் பிரசாத்.
"இவங்க வைதேகிக்கு சொந்தக்காரங்க." என்று சுருக்கமாகக் கூறினான் ஜெயராம்.
"ஓ!... வைதேகி சொந்தகாரங்க, என்கிட்ட வந்து வைதேகிய விசாரிக்கிறீங்க?" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்கவே பொறுமை இழந்த வேலு,
"வைதேகியோட பையனுக்கு இந்தப் பொண்ணைக் கட்டிக் கொடுக்கப் போறோம் விசாரிக்கக் கூடாதா?" என்று கேட்டான்.
"இல்லையேப்பா... உங்களையெல்லாம் பார்த்தா வித்தியாசமா இருக்கே?" என்ற பிரசாத்,
ஜெயராமைப் பார்த்து, "இவரே, அன்னைக்குப் பார்த்த மாதிரி அப்படியே இருக்காரேன்னு சந்தேகமா இருக்கு... " என்று சந்தேகமாக இழுக்க,
"டேய்! ஒழுங்கா கேட்டா சொல்ல மாட்டியா? நீயெல்லாம், எங்களை சந்தேகப்படுவியோ? உனக்கு ரகு, பேதி மருந்து கொடுத்தது தப்பு. பூச்சிமருந்து கொடுத்திருக்னும்." என்று வேலு எகிறவும்,
"யார் நீங்க? எங்கிட்டயே சத்தம் போடுவீங்களா? நான் பத்திரிகை காரன்" என்று மிரட்ட,
"நான் அசிஸ்டன்ட் கமிஷனர் சரவணவேலு ஐபிஎஸ்... " என்று தன் ஐடி கார்டை வேலு, பிரசாத்திடம் காட்டிவிட்டு,
"என்ன இங்கே இருந்து பதில் சொல்றியா? இல்ல... ஸ்டேஷனுக்குப் போகலாமா?" என்றதும். வெலவெலத்துப் போன பிரசாத்,
"சார்! சாரி சார்! என்ன விஷயம்? கேளுங்க?" என்றான்.
"வைதேகியை நாங்க பார்க்கணும்." என்று வேலு கூறியதும், ஜெயராமை ஒரு முறை பார்த்த பிரசாத்,
"இந்த டாக்டர்கிட்ட கேட்டீங்களா? " என்று கேட்க,
"அதெல்லாம் நான் கேட்டுக்கிறேன். நீ சொல்லு." என்றான் கொஞ்சம் கடுமையாக,
"என்ன சார் போலீஸ்ஆபிசர் நீங்க?... வைதேகியை இப்ப வந்து கேட்கிறீங்க?" என்று பிரசாத் கேட்டும்,
வேலு ஒன்றும் பேசாமல் பார்க்கவே,
"இவர்கூட வந்த டாக்டரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்லிக்கிட்டிருந்தா...ங்க வைதேகி..." என்று ஜெயராமை காட்டி சொன்னவன்,
முன்பு நடந்தவைகளைக் கூறத்தொடங்கினான்...
அன்று...
"என்ன வைதேகி அடிக்கடி அரசு மருத்துவமனை பக்கத்துல பார்க்கிறோம்... என்ன விஷயம்?" என்று எடிட்டர் கேட்க,
"வந்து... நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சார்." என்றதும் ஆபீஸ்சே சந்தோஷத்தில் கத்திக் கூச்சலிட்டது.
ஆளாளுக்கு வைதேகியிடம் சென்று, "எப்படி வைதேகி? நீ காதல் பண்ணுவேன் நாங்க எதிர்பார்க்கலை... எப்பக் கல்யாணம்?" என்றெல்லாம் கேட்க,
"இன்னைக்குத்தான் எங்க வீட்ல என் காதலை சொல்லப்போறேன். முதல்ல எங்க அத்தை பத்மாகிட்ட சொல்லிட்டா, அவங்க என் அப்பா கிட்ட அனுமதி வாங்கிடுவாங்க. அதுக்காகத்தான் உங்க கிட்ட அரைநாள் லீவு கேட்க வந்தேன்." என்றாள் வைதேகி.
"சரிமா! போயிட்டு வா! எல்லாம் நல்லவிதமாக நடக்கும்" என்று வாழ்த்தி அனுப்பினார் எடிட்டர்.
அருகில் இருந்த கோயிலின் வாசலில் நின்று பத்மாவிற்காகக் காத்திருந்தாள் வைதேகி. சிறிது தூரத்தில் பத்மா வருவது தெரிய, அவளை நோக்கிச் சென்று, இருவருமாகக் கோயில் பிரகாரத்தில் அமர்ந்தனர்.
"என்ன வைதேகி எதுக்கு என்னை இங்கே வரச்சொன்ன?" என்று பதட்டமாகக் கேட்டாள் பத்மா.
"நான் ஒருத்தரை காதலிக்கிறேன் அத்தை... அவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கார்."
"அவரும் உன்னைக் காதலிக்கிறாரா?"
"ஆமா! அவர் என்மேல் உயிரையே வைதச்சிருக்கிறார். நீதான் அப்பா கிட்ட சொல்லனும் அத்தை."
"எந்த ஊரு?"
"தெரியல. "
"அவங்க அப்பா என்ன பண்றார்? அவங்க வீட்ல சம்மதிப்பாங்களா?"
"அவருக்கு அம்மா, அப்பா இல்லை. ஒரு வயசு இருக்கும்போது, யாரோ ஆஸ்ரமத்துல விட்டுட்டுப் போனாங்களாம்." என்று வைதேகி கூறியதைக் கேட்ட பத்மா அதிர்ச்சியடைந்தாள்.
"என்ன வைதேகி இவ்வளவு சாதரணமா சொல்லிட்ட? பெத்தவங்க இருந்து வளர்க்கிற ஆம்பளப் பசங்களே சரியில்லை. ஆஸ்ரமத்துல வளர்ந்தவரை காதலிக்கிறேன்னு வந்து நிக்கிற? அவர் யாரு? அவங்க குடும்பம் எப்படிபட்டதுன்னு விசாரிச்சு பண்ற கல்யாணமே சிக்கி சீரழியுது. இதுல தனியா வளர்ந்த ஆம்பளைகிட்ட என்ன நல்ல விஷயம் இருக்கும்? பின்னாடி அவரே தப்பு பண்றார்னா, யார்கிட்ட சொல்லிய் தட்டிக்கேட்க முடியும்? இது சரிவராது. அண்ணே ஒத்துக்காது."என்று பத்மா கூறியதும்,
"என்ன அத்தை இப்படிப் பேசுற... அவர் ரொம்ப நல்லவர் அத்தை... ஒரு கெட்ட பழக்கம் இல்லை... அவரா படிச்சு டாக்டரா ஆயிருக்கார்... நீ ஆஸ்பத்திரில வந்து விசாரிச்சுப் பாரு அத்தை." என்று வைதேகி கூறும் போதே,
ரகுநந்தன் கோயிலுக்குள் வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த வைதேகி,
"அத்தை அதோ வராரே அவர்தான் நான் சொன்ன டாக்டர்." என்று காட்ட,
ரகுநந்தனை உச்சிமுதல் உள்ளங்கால் வரை எடைபோட்டாள் பத்மா.
"பார்க்க நல்லாதான் தெரியுறான்… இவனோட அழகிலும், டாக்டர் ங்கிற வேலையிலும் அசந்து போயிட்டாளோ வைதேகி?!!' என்று நினைத்தவாறு வைதேகியைத் திரும்பிப் பார்க்க,
வைதேகி, ரகுநந்தனைப் பார்க்கும் பார்வையில் பத்மா மிரண்டு விட்டாள்...
'என்ன இவ இப்படி முழுங்குற மாதிரி பார்த்து வைக்கிறா... ஆம்பளைய பார்க்கிற மாதிரியா பார்க்கிறா?' என்று நினைத்த பத்மா,
"வைதேகி! கொஞ்சம் அடக்கி வாசி!" என்று மென்மையாகக் கடிந்த பத்மாவே அரண்டு போகும் அளவு பார்த்துக் கொண்டே வந்தான் ரகுநந்தன்.
'என்ன இது? ரெண்டும் இப்படிப் பார்த்துக்குதுங்க... ரொம்ப நாளா விரும்புறாங்களோ? பையன் பார்க்க நல்லவனாத்தான் தெரியுறான்.' என்று நினைக்கும் போதே அருகில் வந்து விட்ட ரகுநந்தன்,
"கும்பிடுறேன் சித்தி!" என்று கூறி தன் இரு கைகளையும் குவிக்க,
"சித்தியா!" என்று கேட்டாள் பத்மா.
"ஆமா! வைதேகிக்கு அத்தைனா எனக்குச் சித்தி தானே? எங்க கல்யாணத்துக்கு வைதேகி பக்கம் நிறைய உறவு வருவாங்க சித்தி! ஆனா என் பக்கம் உங்களைத்தவிர நண்பர்கள் மட்டும் தான்... உங்களுக்கு என் வயசுல பையன் இருக்க வாய்ப்பில்லைனாலும், நீங்க ஒத்துக்கிட்டா நான் உங்க மகனா இருப்பேன் சித்தி "என்று சிரித்தபடி கூறிய ரகுநந்தனை,
பத்மாவிற்குப் பிடித்துபோனது. அவன் கண்களில் தெரிந்த உண்மையான பாசம் பத்மாவின் வயிற்றில் ஏதோ செய்தது... அவன் பாசாங்காகப் பேசவில்லை என்பது தெளிவாக,

"உனக்கு நான் இருக்கேன் ரகு... என்னொட பிள்ளை உனக்குச் செய்யாமல் யாருக்கு செய்யப்போகிறேன்." என்று பத்மா ஆதரவளிக்க,
தனக்கென வந்த முதல் உறவில் உருகி, பாசத்தில் பத்மாவைக் கட்டிக்கொண்டான் ரகுநந்தன்.
பத்மாவின் மகனாகப் பெண் கேட்கப் போகும் ரகுநந்தனை, வைதேகியின் அப்பா, மருமகனாக ஏற்றாரா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments