சுவையான மதுரைமீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
புளி - 2 எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
புளியைக் கரைத்து, அதில் நான்கு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து உப்பு, காரம், புளிப்பு சமமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். காரம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நல்லது.
வாணலியில் மண்சட்டி வைத்து, ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், நீள வாக்கில் நறுக்கிய பத்து சின்ன வெங்காயம், இரண்டாக கீறிய ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
பின் நீள வாக்கில் நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றுங்கள்.
குழம்பு நன்றாக கொதிக்க வேண்டும். மீண்டும் உப்பு காரம் புளிப்பு சமமாக இருக்கிறதா என்று பார்க்கவும்.
குழம்பு நன்றாக கொதித்ததும் நன்றாக கழுவி வைத்த மீனை சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான மீன் குழம்பு தயார்!
குறிப்பு:
தேங்காய் அரைத்து ஊற்றாமல் குழம்பு வைத்தால் மீன் குழம்பு சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.
தேவைப்பட்டால் கொஞ்சமாக வெறும் தேங்காய் பால் மட்டும் சேர்க்கலாம்.
குழம்பில் புளிப்பும், காரமும் சற்று தூக்கலாக இருக்கவேண்டும்.
குழம்பில் மீன் போட்ட பிறகு கரண்டியை வைத்து அதிகமாக கிளறக் கூடாது மீன் உடைந்து விடாமல் பக்குவமாக கிளற வேண்டும்.
நல்ல மீன் பரிசோதிக்க:
மீனின் வாயைத் திறந்து பார்த்தால் சிவப்பாக இருக்க வேண்டும்.
கழுவும் முறை:
மீனை தண்ணீரில் நன்றாக கழுவி, கடைசியாக உப்பு போட்டு கழுவ வேண்டும்.
🙏🙏🙏🥗🍜🍲🙏🙏🙏
.
0 Comments